தற்போதைய செய்திகள்:

♣ என் இனிய வலைப்பூ விருந்தினரே வருக.! தங்கள் வரவு இனிய நல்வரவாகுக.! ரமலான் நல் வாழ்த்துக்கள் ♣ .

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இப்புதிய ஆண்டில் எமது தளத்தை எளிதில் பார்வையிட புதியதாக http://www.thahirknr.co.cc/ என்ற தளத்தின் மூலமாகவும் காணலாம், தங்களின் ஆதரவே எனது தூண்டுகோள்.

Oneindia.in - thatsTamil

SunPower

Saturday, April 28, 2012

கற்பில் கவனம் தேவை ( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )


கற்பில் கவனம் தேவை
( தேங்கை ஷறஃபுத்தீன் மிஸ்பாஹி )

அல்லாஹ்வும் அவனது தூதரும் விலக்கிய பாவங்களுக்கு மத்தியில்- கொலை – கொள்ளை, திருட்டு, மது அருந்துதல், மோசடி செய்தல், அவதூறு பரப்புதல், பொய் – புறம் பேசுதல் போன்ற பாவங்களெல்லாம் 'ஆண் – பெண்' ஆகிய இரு பாலருடனும் தனித்தனியே தொடர்புடையவையாகும். ஆனால் விபச்சாரம் எனும் கொடிய பாவம் மட்டும் இரு பாலரின் கூட்டு முயற்சியால் உருவாகக் கூடியதாகும். இந்தப் பாவம் இன்றைய காலகட்டத்தில் பெருகிக் கொண்டே வருவதை பத்திரிகைச் செய்திகளின் மூலம் நம்மால் உணர முடிகிறது.

சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் விடுதிகளிலும், உல்லாச மாளிகைகளிலும் ஒடுங்கிக் கிடந்த விபச்சாரம் இந்நாளில் 'செல்போன்' மூலம் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு சாலையோரத்தில் மாருதி கார்களில் நடைபெறுமளவிற்கு மலிந்து விட்டது. 'இன்டர்நெட்' மூலம் வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அளவு சமீபத்தில் மேலும் பெருகி விட்டது விபச்சாரம். இந்த விபச்சாரம் வெறும் கண்பார்வையால் கூட நிகழாமல் தடுக்கத் தீய ஆசைப் பார்வையை விலக்கிய விந்தை மார்க்கம் இஸ்லாம் ஆகும்.
  

ஒவ்வோர் ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தம்முடைய பாலியல் ஆசையுணர்வுகளையெல்லாம் கணவனுக்குள்ளேயோ தன் மனைவியர்களுக்கிடையேயோ கட்டுப்படுத்தி வாழ்வதே ஒழுக்கமான வாழ்வு!" என்பது உலக நீதி ஒத்துக் கொண்ட உண்மையாகும்.         குர்ஆனும் நபி மொழியும் கற்பிக்கும் இத்தகைய ஒழுக்க நெறிக்கு 'கற்பு' என்று பெயர்.

     'கற்பு' எனும் சொல் இந்நாளில் பெண்களுக்கு மட்டுமே உரியது போல் பெரும்பாலோரும் எண்ணியுள்ளனர். உண்மை நிலை அதுவல்ல. 'கற்பு' எனும் மூன்றடுக்கு மாளிகை, பெண் எனும் ஒரு பாலரின் தனியுடைமையா? இல்லை. இருபாலரின் பொதுவுடைமையாகும். எனவே தான் திருமறை மூலம் இறைவன் நபியை நோக்கி, "(பிற ஆண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தம் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள பெண்களை நோக்கிக் கூறுவீராக!" (குர் ஆன் 24:31) என்று குறிப்பிட்டதுடன் (பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதை விட்டு) தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும் மறைவிடங்களை (கற்பு நெறி தவறுவதிலிருந்து) காத்துக் கொள்ளுமாறும் இறைநம்பிக்கையுள்ள ஆண்களை நோக்கிக் கூறுவீராக!" என்றும் குறிப்பிட்டுள்ளான். மேலும், "தம் மறைவிடங்களைப் பாதுகாக்கும் ஆண்களும் பெண்களும்    (குர்ஆன் 33:35) அல்லாஹ் தயாரித்து வைத்திருக்கும் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் பெறுவதற்கு தகுதியுள்ள பத்து சாராரில் ஒரு சாரார் ஆவர்.' (குர்ஆன் 24:31) என்றுதான் இறைமறை இயம்புகிறதேயல்லாமல் வெறும் பெண்களை மட்டும் தனியாகச் சொல்லவில்லை.
    
ஓர் ஆண், தன் மனைவியல்லாத அந்நியப் பெண்ணுடன் பலவந்தமாக உடலுறவு கொண்டு விட்டால் மட்டும் 'பெண் கற்பழிக்கப்பட்டாள்' என உலகம் பேசுகிறதே தவிர அந்தப் பெண் காதலன் என்ற பெயரில் அந்நிய ஆணுடன் உடலுறவு கொள்ள இணங்கும்போது 'அவள் கற்பழிக்கப்பட்டாள்' என் யாரும் குறிப்பிடுவதில்லை. கணவன் அல்லாதவன் பலவந்தமாக உடலுறவு கொண்டால் அழிகின்ற கற்பு ஒரு பெண்ணின் இசைவோடு நிகழும் உடலுறவினால் மட்டும் அழியாமல் நீடித்திருக்குமா என்ன? மனைவியல்லாத பெண்ணுடன் ஒருவன் உடலுறவு கொள்ளும் போது அவனுடைய கற்பு அவனாலேயே அழிக்கப்படுகிறதல்லவா? எனவே, 'ஆண் கற்பழிக்கப்பட்டான்' என்றும் சொல்வதில்லையே !
   

  கற்பு பெரும்பாலும் நான்கு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகிறதெனக் கணிக்கலாம். தன் ஆசை தணிக்கப்படும் விஷயத்தில் போதிய திருப்தியைக் கணவன் மூலம் அடையவியலாத பெண்களாலும், மனைவியின் மூலம் போதிய திருப்தியை அடையவியலாத ஆண்களாலும் அவரவர் கற்பு அழிக்கப்படுகிறது. இவ்வாறு கற்பை இழப்பதில், பெண்களை விட ஆண்கள்தான் பெரும்பாலும் தீவிரமாக உள்ளனர். திருமணம் புரியும் நிலையிலுள்ள இரு தரப்பைச் சார்ந்த இளைய வயதினர் 'காதல்' எனும் காந்தத்தால் ஒருவரையொருவர் கவர்ந்திழுக்கும் போது புதிய அனுபவத்தினால் பூரிப்படைய தம் கற்பை விடுகின்றனர். இவ்வகையைச் சார்ந்த கற்பிழப்பில் இரு தரப்பினரும் சமமான பங்கை வகிக்கின்றனர்.
    
வறுமையின் கோரப் பிடியிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், வாழ்வில் ஓரளவுக்குக் கிடைக்கும் வசதிகளை மேலும் வளப்படுத்திக் கொள்ளவும் பெண்களில் சிலர் தம் கற்பைத் தாமே அழித்து விடுகின்றனர். இத்தகைய நோக்கில் கற்பை இழப்பது பெண்களுக்கிடையேதான் காணப்படுகிறது. ஆசை வெறி பிடித்த மிருகங்கள் அப்பாவிப் பெண்களைச் சில நேரங்களில் அத்து மீறித் தூக்கிச் சென்று பலவந்தமாகக் கற்பழித்து விடுகின்றனர். இம்முறையிலுள்ள கற்பழிப்பு செய்வோர்களோடு மட்டுமே தொடர்புடையதாகவுள்ளது.


     இத்தகைய நான்கு விதமான கற்பழிப்புகளில் நான்காவதாகக் கூறப்பட்ட வகையில் சிக்கிக் கொண்ட பெண்களைத் தவிர ஏனைய அனைத்து வகைக் கற்பழிப்புகளில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் அல்லாஹ்வின் கடுமையான கோபத்திற்கும் சாபத்திற்கும் உரியவர்களாவர்.

     'விபச்சாரம்' எனப்படும் இத்தகைய கற்பழிப்பினைக் குறித்து இறைவன் "விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்" நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் அது (பல்வேறு கேடுகளுக்கான) தீய பாதையாகவும் இருக்கிறது" என்று திருமறை மூலம் எச்சரிக்கிறான (குர்ஆன் 17:32) இறைவன் மனிதர்களை நோக்கி "விபச்சாரம் செய்யாதீர்கள்" என்று கூறுவதற்குப் பதில் 'விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்' என்று விலக்கியிருப்பது எத்துணை அழுத்தமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். 'நெருப்பைத் தொடாதே!' என்பதை விட 'நெருப்பின் பக்கமே நெருங்காதே!' என்றுரைப்பது வலிவு மிக்கதல்லவா? வார்த்தைச் சித்தர் வலம்புரியார் உவமைப்படுத்துவது போல் 'விபச்சாரம்' எனும் கொசுக்களை ஒழிக்க வேண்டும்' என்று மட்டும் இஸ்லாம் கூறாமல் இந்தக் கொசுக்கள் உருவாவதற்குக் காரணமான 'ஆசைப்பார்வை' எனும் சாக்கடையையே அகற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது. 'விபச்சாரம் நிகழ்வதற்குக் காரணமாக அமைந்து விடும் அந்நிய ஆண் – பெண் தனிமையாக இருக்கும் நிலை கூட மேற்கண்ட வசனத்தின் மூலம் மறைமுகமாக விலக்கப்பட்டிருக்கிறது.


     ஒருவன் ஒரு பெண்ணுடன் தனித்திருக்கும் போது அங்கே அவர்களோடு மூன்றாம் நபராக ஷைத்தானும் இருக்கிறான் எனும் நபிமொழி (உமர் (ரளி), திர்மிதீ) மேற்கண்ட திருவசனத்தின் கருத்தை மேலும் விளக்குகிறது.


     ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் மிகப் பெரியதாகக் கருதப்படும் பாவம் எது? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரை நோக்கி, அல்லாஹ் உம்மைப் படைத்திருக்க அவனை வணங்குவதில் வேறு ஒருவனை அல்லது ஒன்றை அவனுக்கு இணைகற்பிப்பது' என்றார்கள். 'இதற்குப் பின் எந்தப் பாவம் மிகப் பெரியது? எனக் கேட்டார். அதற்கு நபியவர்கள் 'உன்னோடு உணவருந்துவதை (வறுமையை) அஞ்சி உம் குழந்தையைக் கொலை செய்வது!' என்றார்கள். 'இதற்குப் பின் எந்தப் பாவம் பெரியது? என்று அவர் மீண்டும் கேட்டதும், நபியவர்கள் அவரை 'உம் அண்டை வீட்டாரின் மனைவியோடு நீர் விபச்சாரம் செய்வது பெரிய பாவம்!' என்று பதிலளித்தார்கள். அந்நேரம் அண்ணலாரின் மேற்கண்ட பதிலை உண்மைப்படுத்தும் நிலையில் – அருளாளனின் நல்லடியார்களான அவர்கள்) அல்லாஹ்வுடன் இன்னொரு இறைவனை வணங்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் விலக்கிய உயிரை அநியாயமாகக் கொலை செய்ய மாட்டார்கள்.' விபச்சாரமும் செய்ய மாட்டார்கள்' எனும் திருவசனத்தை (குர்ஆன் 25:68) அல்லாஹ் அருளினான். (இப்னு மஸ்வூத் (ரளி), புகாரீ, முஸ்லிம்) அண்டை வீட்டாரின் மனைவியிடம் விபச்சாரம் செய்வதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், பொதுவாகக் கொடிய பாவமான விபச்சாரம் அண்டை வீட்டானின் மனைவியோடு அமையும் போது பாவம் இன்னும் கொடியதாகி விடுகிறது எனும் உண்மையினைக் குறிப்பிடுவதேயாகும். ஏனெனில் அண்டை வீட்டானிடம் அணுக வேண்டிய நல்லன்பும் நம்பிக்கையும் இதனால் தகர்த்தப்படுகிறது.


     கற்பைக் காப்பவர்கள் சுவனத்தில் கண்ணியப்படுத்தப்படும் எட்டு சாராரில் ஒரு சாரார் என்று குர்ஆன் 23:29 கூறுகிறது. பிர்தவ்ஸ் என்ற உயர் சுவனத்தின் வாரிசுக்காரர்களாய் அமைந்து வெற்றி பெறும் மூமின்களின் ஆறு சாராரில் கற்பைக் காப்போரும் ஒரு சாரார் ஆவர் என்றும் அருள்மறை (23:5) உணர்த்துகிறது. ஒருவர் இரு தொடைகளுக்கிடையில் இருக்கும் இன உறுப்பையும் இரு தாடைகளுக்கிடையில் இருக்கும் நாவையும் (தீய வழியிலிருந்து) காத்துக் கொள்வதாக என்னிடம் பொறுப்பு ஏற்றுக் கொண்டால் அவருக்கு நான், சுவனத்தைப் பெற்றுத் தர பொறுப்பேற்கிறேன்" எனும் நபிமொழியும் (ஸஹ்லிப்னு ஸஃது (ரளி, புகாரீ) மேற்கண்ட மறைமொழிகளும் இம்மையில் கற்பைக் காப்போர் மறுமையில் பெறவிருக்கும் இனிய வாழ்வை உறுதிப்படுத்துகிறது. எனவே இம்மையின் அற்ப ஆசைக்காகக் கற்பை இழந்துவிட்டு மறுமையின் அற்புத ஆனந்தங்களை இழக்க நேரிடும் இழிநிலையிலிருந்து நம்மை நாம் காப்போம்! நாயனருள் பெற்றிட முனைவோம்.

நன்றி : சிந்தனை சரம் – நவம்பர் 2005

--Thanks to Brother,
MUDUVAI HIDAYATH


No comments:

NOTICE BOARD

இஸ்லாமிய அமைப்புகளின் இலட்சிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்ஹு. அன்றொரு காலம் இருந்தது: திமுக வின் கருணாநிதியும்அதிமுக வின் MGR ம் பொது நிகழ்ச்சிகளில் சந்திக்க நேர்ந்தால் தழுவிக்கொள்வார்கள் அல்லது குசலமாவது விசாரிப்பார்கள்.. ஆனால் இரு கட்சித்தொண்டர்களும் அடிதடி , கைகலப்பு , வெட்டு குத்து என அன்றாடம் மோதிக்கொள்வதை ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தோம். இன்றொரு காலம் இருக்கிறது: இஸ்லாமிய சமுதாய அமைப்புகளின் கண்ணியமிக்க தலைவர்கள், தங்களது கருத்து வேறுபாடுகளால் பொது நிகழ்ச்சிகளில் சந்திப்பதைக்கூட தவிர்க்க சிந்திக்கிறார்கள். ஆனால் சமுதாய அமைப்புக்களில் தங்களை உட்படுத்திக்கொண்ட அன்பிற்குரிய சகோதரர்கள் மோதிக்கொள்வதாகத் தகவல்கள் மிக அரிது.. வாதத்துக்காகவும் ,பகட்டுக்காகவும் இல்லாமல் சுய சிந்தனையோடு கூறுங்கள் சகோதரர்களே! உங்களில், ஒற்றுமை ஏற்படுவதை விரும்பாத ஒருவராவது இருக்க முடியுமா? அல்லது ''ஒற்றுமை ஏற்படாதா?'' என்று ஆதங்கப்படாத உள்ளம் தான் இருக்க முடியுமா? சமுதாயத்தலைவர்கள் தங்கள் வெட்டி கௌரவத்தை(பந்தா?) விட்டு வெளியில் வந்து பழையன மறந்து சமுதாய ஒற்றுமைக்காக புது உறவை ஏற்படுத்த மாட்டார்களா? தங்களை நல்ல முறையில் வழி நடத்த மாட்டார்களா? என்று ஏங்காத உள்ளமுடைய எவரேனும் உங்களில் இருக்க முடியுமா? நாம் சிந்தனை செய்யும் சக்தியை ஏக இறைவனால் வழங்கப்பெற்றவர்கள்...சிந்தனை செய்யுங்கள்.... ((((( 2 ))))) அனைத்து இஸ்லாமிய சமுதாய இயக்கங்களும் இலட்சியத்தில் ஒன்று படுகிறது; நோக்கம் இறைவனின் நேசத்தைப்பெற்று மறுமை வெற்றியை அடைய வேண்டும் என்பதாகத்தான் அமைந்திருக்கும். மாஷா அல்லாஹ்.நோக்கம் உன்னதமானது. ஆக, பாதைகள் தான் வெவ்வேறே தவிர இலக்கு வெவ்வேறல்ல. ஆனால் துவங்கப்பட்ட அமைப்புகள் இந்த இலட்சியத்தை அடைவதற்கான செயல்பாடுகளிலிருந்து தடம் புரள்வதேன்? துரதிர்ஷ்டவசமாக சில இயக்கங்களை நிர்வகிப்பவர்களின் செயல்பாடுகள் ''ஊசலாட்டங்களை ஏற்படுத்துபவனின்'' செயல்களைப் போன்று அமைந்து விடுகிறது. இங்கே 'மாற்றான் தோட்டத்து மல்லிகையின் மணம்' கண்டு கொள்ளப்படுவதேயில்லை; ஏனைய பண்புகளே மிகைப்படுத்தப்படுகிறது. பிற இஸ்லாமிய சமுதாய அமைப்புகளுடையவும் அதைச்சார்ந்தவர்களுடையவும் குறைகளை மிகைப்படுத்துவதையே முக்கிய இலக்காகக் கொண்டுள்ளனரோ? என்று எண்ணத்தோன்றுகிறது! படைக்கப்பட்டவனுடைய உள்ளத்தை படைத்தவன் அறிவான். படைத்தவனின் உரிமைகளை தனதாக்கிக்கொள்ள எவருக்கு தகுதியிருக்கிறது? ''இன்னமல் அஃமாலு பின் நிய்யத்''என்பதை மறப்பதேன்? நான் அல்லது நாம் செய்வது தான் சரியென்பது அவரவர் நம்பிக்கை; தீர்ப்பு செய்யும் அதிகாரம் படைத்தவனுக்குரியது. குறைகள் தெரிந்தாலும் அன்போடும் அக்கரையோடும் நளினமான முறையில் எடுத்துக்கூறும் பண்பு ஏன் இல்லாமல் போயிற்று? எங்கே இந்த சமுதாயம் அழிந்துவிடதா? என நப்பாசை கொண்டு திரிபவனுக்கு மத்தியில் நமது குறைகளை மேடைபோட்டு அரங்கேற்றுவதில் சகோதரர்களே! நீங்கள் உடன்படுகிறீர்களா? ((( 3 ))) நமது இயக்கங்களின் நிர்வாகிகள் அரசியல் குள்ளநரிகளின் சூழ்ச்சியில் விழுந்து விடும் சூழ்ச்சுமம் என்னவாக இருக்கும்? இதற்கு விடை அறிய வேண்டுமெனில் முதலில் சூழ்ச்சி என்னவென்று தெரிய வேண்டும். சமீபத்திய நிகழ்வு ஒன்றை பார்ப்போம்... நமது சமுதாய இயக்கம் ஒன்றின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில்,, ஒரு கட்சியை வரும் பாரளுமன்றத்தேர்தலில் ஆதரிப்பது என்பதும் ஒரு தீர்மானம். இந்த முடிவு 2007 ஆம் வருடத்திலேயே எடுக்கப்பட்டது என்பது வெளியிடப்பட்ட கடிதத்தின் வாயிலாக நமக்கு இப்போது தெரிய வருகிறது. ஆனால் எழுதப்பட்ட கடிதம் யாருக்கு? நரிக்குணத்துடன் முதுகில் குத்தும் குணமுடையவருக்காயிற்றே! முன்னணி இயக்கங்களில் ஒன்றை கூட்டுப்பிடித்திருந்தும் மற்றொன்றின் ஆதரவு இல்லாததால் (கோவை மற்றும் சில இடங்கள்)பெரும்பான்மையும் கிடைக்கவில்லை; கிடைத்த இடங்களிலும் (சென்னை மற்றும் சில இடங்கள்)சொற்ப ஓட்டுக்களில் வெற்றி என்று நொந்து போயிருந்தவருக்கு அல்லவா இந்த கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.. 2007 ல் தகவல் கிடைக்கப்பெற்றவர் குதூகலம் அடைந்திருப்பார்! ''இந்த இஸ்லாமியர்கள் சொன்ன சொல்லைக் காப்பார்கள்'' என்பதும் ''இந்த இஸ்லாமிய இயக்கங்கள் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ஒற்றுமையற்ற இயக்கங்கள்'' என்பதும் புரிந்த தந்திரக்காரர் அவர்! திட்டம் வகுத்திருப்பார்!! இலவசமாக ஒரு இயக்கத்தின் ஆதரவு கிடைக்கப்போகிறது; முன்னர் ஆதரித்த இயக்கம் கூடவே இருந்தால் ஒன்றிரண்டு தொகுதிகள் கேட்டு நச்சரிப்பார்கள் ; திட்டம் வகுத்து கழற்றி விட்டுவிட்டார்.. சூடு, சொரணையற்ற இளிச்சவாயர் கூட்டத்தின் பகுதி ஓட்டுக்கள் இலவசமாகக் கிடைக்கும் போது மற்றொரு பகுதியில்லாமலே (அதுவும் சிதறி விடும்)இந்த சமுதாயத்தை சமாளித்து விடலாம் என்று சூழ்ச்சி செய்தார். சரி, அவர் சூழ்ச்சி செய்தார்! அது அவரது அரசியல்! நம்மவர்கள் எப்படி சூழ்ச்சியில் விழுந்தார்கள்? என்றெல்லாம் (இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சிய சகோதரர்களே) நீங்கள் கேட்க விரும்புகிறீர்கள் என்றால் ........மகிழ்ச்சி.........நீங்களும் சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள் என்று பொருள். இன்ஷா அல்லாஹ்... தொடருவேன்... சமுதாய ஒற்றுமையை விரும்பும் ஒரு சாதாரண சகோதரன்... நாஞ்சில் தமிழ்.

திக்ருகள்‏

திக்ரு என்பது இறைவனை நினைவு கூறுவதாகும்.. மனிதன் இறைவனின் நினைவுகளோடு இவ்வுலகில் வாழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைபாடு. இது மனிதனை வெற்றிக்கு இட்டுச் செல்லும் வழியாகும். ஐவேளை தொழுகை கூட இறைவனை நினைவு கூறக்கூடியதாகவே அமைந்துள்ளது. தொழுகை நேரம் போக அன்றாட வாழ்க்கையின் மற்ற நேரங்களிலும் இறைவனை நினைவு கூறுவதற்கு சில திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.. அதற்கு முன் திக்ரு செய்வதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும். திக்ருகளின் சிறப்புகள் : فَاذْكُرُونِي اَذْكُرُكُمْ 'என்னை நீங்கள் நினைவு கூறுங்கள், நானும் உங்களை நினைவு கூறுவேன்' (அல்குர்ஆன் 2:152) நாம் அல்லாஹ்வை திக்ரு செய்தால் அல்லாஹ் நம்மை நினைவு கூறுகிறான். இது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். وَاذْكُرْ رَبَّكَ فِيْ نَفْسِكَ تَضَرُّعًا وَخِيْفَةً وَدُوْنَ الجَهْرِ مِنَ القَوْلِ بِالْغُدُوِّ وَالآصَالِ وَلاَ تَكُنْ مِنَ الغَافِلِيْنَ '(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்' (அல்குர்ஆன் 7:205) திக்ரு எவ்வாறு செய்ய வேண்டும் என்ற முறையை இறைவன் இங்கே நமக்கு கற்றுத் தருகிறான். يَأيُّهَا الَّذِينَ ءَامَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ، وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு செய்யுங்கள்.. இன்னும் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்' (அல்குர்ஆன் 33:41,42) அல்லாஹ்வை அதிகமதிகம் திக்ருச் செய்ய வேண்டும், காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் செய்ய வேண்டும் என்பது இதன் பொருளாகும். காலையிலும் மாலையிலும் மட்டும் திக்ருச் செய்தால் போதும் என்பது இதன் பொருள் அல்ல. لاَيَقْعُدُ قَوْمٌ يَذْكُرُوْنَ اللهَ عَزَّ وَجَلَّ إِلاَّ حَفَّتْهُمُ المَلاَئِكَةُ وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِيْنَةُ ، وَذَكَرَهُمُ اللهُ فِيْمَنْ عِنْدَهُ (رواه مسلم) 'அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமரும் கூட்டத்தினரை மலக்குகள் சூழ்ந்தும், ரஹ்மத் (இறையருள்) அவர்களை மூடியும் 'ஸகீனா' என்னும் நிம்மதி அவர்கள் மீது இறங்கியுமே தவிர வேறில்லை. அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடம் (மலக்குகளிடம்) அவர்களைப் பற்றி (புகழ்ந்து) கூறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்கள்: அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீது (ரலி) நூல்: முஸ்லிம்) திக்ரு செய்வோரை மலக்குகள் சூழ்ந்து இருப்பார்கள், மனிதன் சுவர்க்கம் செல்ல அவசியம் தேவைப்படும் இறையருள் அங்கே இறங்குகிறது, நிம்மியும் இறங்குகிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றி புகழ்ந்து கூறுகிறான் போன்றவற்றை இழக்க எவருக்குத் தான் மனம் வரும். மற்றொரு ஹதீஸில், அல்லாஹுத்தஆலாவின் சில மலக்குகள், திக்ரு செய்பவர்களைத் தேடியவர்களாக பாதையில் சுற்றுவார்கள். அல்லாஹுத்தஆலாவை திக்ரு செய்யும் கூட்டத்தாரை அவர்கள் கண்டால் உடனே, 'இதோ இங்கு உங்கள் குறிக்கோளின் பக்கம் வாருங்கள்' என அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு விடுப்பார்கள். உடனே அனைத்து மலக்குகளும் அங்கு வந்து, திக்ரு செய்யும் கூட்டத்தாரை முதல் வானம் வரை சூழ்ந்து கொள்வார்கள். பிறகு அவர்களின் இரட்சகனான அல்லாஹ் - அவன் மிக அறிந்தவன் - என் அடியார்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்பான். அதற்கவர்கள், உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள், உன்னை தக்பீர் கூறுகிறார்கள், உன்னை புகழ்கிறார்கள், உன்னை கண்ணியப்படுத்துகிறார்கள் எனக் கூறுவார்கள். அதற்கவன், என்னை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கவர்கள் இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை என்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் என்னைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருப்பார்கள்? எனக் கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் உன்னைப் பார்த்திருந்தால், இன்னும் மிக அதிகமாக உன்னை வணங்குபவர்களாகவும், மிக அதிகமாக உன்னைக் கண்ணியப்படுத்துபவர்களாகவும், மிக அதிகமாக உன்னை தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பதிலளிப்பார்கள். பிறகு அல்லாஹ், அவ்வடியார்கள் என்ன கேட்டார்கள்? என்று அவர்களிடம் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் உன்னிடம் சுவர்க்கத்தை கேட்டார்கள் எனக் கூறுவார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! எங்கள் இரட்கனே! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை எனப் பதிலளிப்பார்கள். அதற்கு அல்லாஹ், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு இருக்கும்? என்று கேட்பான். அதற்கு மலக்குகள், அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் அதன் மீது மேலும் பேராசைக் கொள்வார்கள், அதிகமாகத் தேடுவார்கள், அதனை அடைய அளப்பெறும் ஆவல் கொள்வார்கள் எனக் கூறுவார்கள். பின்னர் அவர்கள் எதனை விட்டுப் பாதுகாவல் தேடுகிறார்கள் என மலக்குகளிடம் அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் நரகை விட்டுப் பாதுகாவல் தேடுகின்றனர் என்பர். அவர்கள் அதனைப் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் அதனைப் பார்க்கவில்லை என மறுமொழி கூறுவார்கள். அவர்கள் அதனைப் பார்த்திருந்தால் எவ்வாறு? என்று அல்லாஹ் கேட்பான். அதற்கவர்கள், அவர்கள் அதைப் பார்த்திருந்தால் இதைவிட மிக அதிகமாக அதனை விட்டு விரண்டோடுவார்கள். கடுமையாக அதனை அஞ்சுவார்கள் எனப் பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் (மலக்குகளே) நான் அவர்களை மன்னித்து விட்டேன். அதற்கு உங்களைச் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான். அப்போது மலக்குகளில் ஒருவர் அவர்களில் ஒருவர் திக்ர் செய்தவர்களின் கூட்டத்தில் உள்ளவரல்ல, ஏனெனில் அவர் அவரது ஏதோ ஒரு தேவைக்காக அங்கு வந்தார் எனக் கூறுவார். அதற்கு அல்லாஹ், திக்ரு செய்தவர்களாக அமர்ந்திருந்தவர்களுடன் சேர்ந்து அமர்ந்து இருந்த எந்த மனிதரும் நற்பாக்கியத்தை இழக்க மாட்டார். (அவரும் நற்கூலி பெறுவார்) எனக் கூறுவான். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) மற்றொரு ஹதீஸில், அபூ வாகித் அல் ஹாரிஸ் பின் அவ்ப் (ரலி) அறிவிக்கிறார்கள்: அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்து இருந்தார்கள். மக்களும் அவர்களுடன் அமர்ந்து இருந்தார்கள்.. அப்போது மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களின் சமூகம் முன்னோக்கி வந்தனர். ஒருவர் போய் விட்டார். அவ்விருவரும் நபியவர்களின் அவையில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவ்விருவரில் ஒருவர் அவ்வட்டத்தில் ஒரு காலியிடத்தைப் பார்த்தார்... உடனே அவர் அதில் போய் அமர்ந்தார். மற்றொருவர் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டார். நபி (ஸல்) அவர்கள் தங்களின் சொற்பொழிவை நிறைவு செய்ததும் கூறினார்கள்: மூன்று நபர்களைப் பற்றி உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அவர்களில் ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கினார். அல்லாஹ் சேர்த்துக் கொண்டான். மற்றொருவர் வெட்கப்பட்டார். அல்லாஹ்வும் அவரிடமிருந்து வெட்கப்பட்டுக் கொண்டான். இன்னொருவர் புறக்கணித்துச் சென்றுவிட்டார். அல்லாஹ்வும் அவரைப் புறக்கணித்து விட்டான். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) ஒரு நாள் முஆவியா (ரலி) அவர்கள் மஸ்ஜிதில் அமர்ந்திருந்த ஒரு திக்ரின் ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, நீங்கள் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாக அமர்ந்துள்ளோம் என மறுமொழி கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதைத்தவிர வேறு எதற்காகவும் நீங்கள் இங்கு உட்காரவில்லையே? என்றார்கள். அதற்கவர்கள், அதைத்தவிர வேறு எதற்காகவும் நாங்கள் இங்கு உட்காரவில்லை எனக் கூறினார்கள். அதற்கு முஆவியா (ரலி) அவர்கள், நான், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக!' என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல. (எனினும் உங்கள் நோக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.) நான் நபி (ஸல்) அவர்களிடம் சிறப்பான அந்தஸ்தைப் பெற்றிருந்தும் (பேணுதலின் காரணமாக) அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே ஹதீஸ்களை அறிவிக்கின்றேன். அவைகளில் ஒன்று. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களின் ஒரு ஹல்காவிற்கு (வட்டத்திற்கு) வந்தார்கள். ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள்? என்று அவர்களிடம் வினவினார்கள். அதற்கவர்கள், 'நாங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்தவர்களாகவும், எங்களுக்கு இஸ்லாமுக்கு வழிகாட்டி எங்கள் மீது அருள் புரிந்ததற்காக அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாகவும் அமர்ந்துள்ளோம் எனக் கூறினார்கள். அப்போது, நபியவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அதற்காகவே அமர்ந்துள்ளீர்களா?' என்றார்கள். அதற்கவர்கள், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அதற்காகவே நாங்கள் அமர்ந்துள்ளோம்' என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள், நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்று உங்களிடம் கேட்டது உங்கள் மீது சந்தேகப்பட்டு அல்ல, எனினும் (இப்பொழுதுதான்) ஜிப்ரீல் (அலை) என்னிடம் வந்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் தன் மலக்குகளிடம் உங்களைப் பற்றி பெருமை பாராட்டுகின்றான் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்' எனப் பகர்ந்தார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீதில் குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்

1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்களை தரப்பட்ட இணைப்பின் மூலம் பெறலாம்
இதை Print செய்து தேவையான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம்.